32

நம் குழந்தைக்கு இங்கே வேலை அமைந்து விடாதா? என்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெற்றோரையும் ஏங்க வைத்துக் கொண்டிருக்கும் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளின் மேலுள்ள ஆர்வம் மட்டும் எவருக்கும் குறைந்தபாடில்லை.

ஆனால் இந்த நாடுகளில் செயல்பாட்டில் உள்ள கல்வி ரீதியான முறைகளைப் பற்றியும் எவரும் தெரிந்து கொள்ள விரும்புவதே இல்லை. காரணம் ஆங்கிலமென்ற அருமருந்து தங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கையைத் தந்து விடும் என்ற மயக்கத்தில் இருப்பதால் மட்டுமே.

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்த்து விடுவோம். இன்று ஜப்பான் என்றால் அந்த நாட்டின் பிரமாண்டமான தொழில் நுட்ப வளர்ச்சி தான் நம் கண்களுக்குத் தெரிகின்றது.

ஆனால் ஜப்பான் நாடு 1868 ஆம் ஆண்டிலேயே தனது ஆண்டு வருமானத்தில் 43 சதவிகிதத்தைக் கல்விக்காக ஒதுக்கி 1893 ஆம் ஆண்டில் கல்லாதவர்கள் நிறைந்திருந்த ஜப்பான் நாட்டு ராணுவத்தில் 1906 ஆம் ஆண்டில் கற்றவர்கள் நிறைந்ததாக மாற்றிவிட்டது. ஐரோப்பிய நாடுகளைப் போலப் பொருளாதார ரீதியாக முன்னேறாத காலகட்டத்திலேயே கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தக் காரணத்தினால் இன்று அதன் அறுவடையை எடுத்துக் கொண்டிருக்கின்றது.

“ஒரு அரசாங்கம் கல்விக்காகச் செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் கல்வியின் அத்தியாவசியக் கூறுகளை ஊக்குவிக்கும்” என்றார் அமர்த்தியா சென். அரசாங்கம் நடத்தும் பள்ளிகளில் குறைபாடுகள் இருந்தால் அதைக் களைய முயற்சி எடுக்க வேண்டுமே தவிரக் கல்வி என்பது அரசாங்கத்தின் பணியல்ல என்று தனியார் முதலாளிகளிடம் தள்ளிவிடும் போக்கும் தான் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இன்று கையில் இருக்கும் காசு வைத்தே கற்கும் கல்வியின் தரம் என்பதாக மாறியுள்ளது.

அதிக லாபம் தரக்கூடிய ஒரு தொழில்துறை என்ன என்று இன்றைய நிலையில் கேட்கப்பட்டால், ‘கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதுதான்’ என்று தயங்காமல் பதில் சொல்லலாம். அந்த அளவிற்கு, கல்வி வியாபாரமாக்கப்பட்டு, கல்விக் கொள்ளைகள் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்டுள்ளன.

கையில் பணம் இருப்பவர்கள் எல்லாம் இன்று சற்றும் யோசிக்காமல், தமக்கு அந்தத் தகுதி துளியளவேனும் இருக்கிறதா? என்று சிறிதும் கவலைப்படாமல், பள்ளிகளையும், கல்லூரிகளையும் நிர்மாணித்து நடத்துகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் தற்போது மத்திய அரசாங்கம் மற்றொரு சீரழிவை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

அதன் பெயர் பிபிபி (PPP PUBLIC PRIVATE PARTNERSHIP) இந்த வகைப் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கீழ்வருமாறு மத்திய அரசு வறையறைக்கின்றது.

இப்பள்ளிகள் கேந்திரிய வித்தியாலாயா பள்ளிகளுக்கு நிகரானவை. குழந்தைகளின் வளர்ச்சியே இப்பள்ளிகளின் முதன்மையான இலக்கு. சிபிஎஸ்சி கல்விமுறை, பயிற்று மொழி ஆங்கிலம், 40 சதவிகித மாணவர்களை அரசு நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கும். 60 சதவிகித மாணவர்களைப் பள்ளி உரிமையாளர் தங்கள் விருப்பப்படி சேர்த்துக் கொள்ளலாம்.

அரசு சேர்க்கும் மாணவர்களுக்கும் எட்டாம் வகுப்புக்கு மேலே கட்டணம் உண்டு. 60 சதவிகித மாணவர்களின் கட்டணம், ஆசிரியர்களின் சம்பளம் போன்றவற்றைத் தனியார் தங்களது விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாம்.

மத்திய அரசின் மானியம் பத்தாண்டுகளுக்கு மட்டுமே.இப்போதைய நிலையில் மாநில அரசுகளின் பணி நிலம் எடுக்கவோ, ஏற்கனவே இருக்கும் பள்ளியை ஒப்படைக்கவோ தயாராக இருக்க வேண்டும்.

பள்ளியின் முழுக்கட்டுப்பாடு பள்ளியின் முழு நிர்வாக மேலாண்மை முழுவதும் தனியாருக்கே சொந்தம். இத்தகை பள்ளிகள் தமிழ்நாட்டில் 355ம் நாடு முழுவதும் 3162ம் தொடங்கப்படும். தனியார் தங்கள் இஷ்டம் போலப் பள்ளிக்கு பெயர் வைத்துக் கொள்ளலாம்.

பெயருடன் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா என்னும் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுவே அரசு தனியார் பங்கேற்பு அடிப்படையில் தொடங்கப்படும் மாதிரி பள்ளிகளைப் பற்றிய சுருக்கம்.

உங்களுக்குத் தலைசுற்றுகின்றதா?

“இந்திய நாட்டின் அத்தனை அடிப்படைத் துயரங்களுக்கும் காரணம் முறையான கல்வியறிவு இன்மையே“ என்றார் ரவிந்தரநாத் தாகூர். ஆனால் இந்தியா சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் அதற்காக ஆய்த்த ஏற்பாடுகளைக் கூடச் செய்ய அரசுகள் முன்வரவில்லை என்பது தான் மகத்தான சோகம்.

மத்திய அமைச்சர் 2013 ஆம் ஆண்டு இந்திய கல்வி வளர்ச்சி குறித்து இவ்வாறு கூறியுள்ளார்.

“கேந்திர வித்யாலயா எனப்படும் மத்திய அரசின் கல்விக் கூடங்கள் நாடு முழுவதும் புதிதாகத் திறக்க மத்திய அரசு விரும்புகிறது. எனினும் அதற்கான நிதி தங்களிடம் இல்லை” என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் மக்களவையில் தெரிவித்தார். இதைப் பற்றி மேலும் அவர் கூறியதாவது.

“கடந்த ஆண்டுக் கேந்திர வித்யாலயாவுக்காக ரூ. 1500 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டதாகக் கூறிய அமைச்சர், தற்போதுள்ள 981 கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு அனைத்துத் தொகையும் செலவாகி உள்ளதாகக் கூறினார். மேலும் அதிக நிதி கிடைக்காதவரை புதிய கேந்திர வித்யாலயா பள்ளிகள் திறக்க இயலாது” என்றும் அவர் கூறினார்.

கேந்திர வித்யாலயா பள்ளிகளின் செயல்பாடுகளைப் புகழ்ந்துரைத்த அமைச்சர், இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு கேந்திர வித்யாலயா பள்ளி இருக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டார். ஆனால் தற்போது சுமார் 275 மாவட்டங்களில் ஒரு பள்ளி கூட இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

நம் நாட்டில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள் அத்தனை பேர்களும் அமெரிக்கா முதல் உலகில் புகழ்பெற்ற மேலைநாட்டுக்கல்வி கூடங்களில் பட்டம் பெற்றவர்கள். இவர்களின் சிந்தனைகளும் எதிர்பார்ப்புகளும் இப்படித்தான் இருக்கும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை.

ஆனால் என்னமாதிரியான பாதகமான விளைவுகளை இங்கே உருவாகப்போகின்றது என்பதைச் சற்று விரிவாகப் பார்த்து விடுவோம்.

சொன்னதைச் சொல்லும் ‘கிளிப்பிள்ளை’ கல்விமுறை, தகவல்களை இட்டு நிரப்பும் ‘வங்கியியல்’ கல்விமுறையாகத் தற்போதைய இந்திய கல்வி முறை உள்ளது., சுய சிந்தனை உள்ளவர்களையும் அடிமையாக இருக்க மறுப்பவர்களையும், ஒதுக்கும் முறையே தற்போதைய நம்முடைய ‘வடிகட்டல்’ கல்விமுறை. கல்விமுறைகள் குறிந்த உலக அறிஞர்களின் விமர்சனங்களை உள்வாங்கிக்கொண்டு, விவாதத்தை முன்னெடுத்திருக்கும் காலமிது.

ஆனால் ‘தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று, கற்றலையும் கற்பித்தலையும் பற்றியெல்லாம் கவலையில்லாமல், கற்பிக்கும் மொழியில் ஒரு எதிர் புரட்சியை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றது

தமிழக அரசு!. ‘அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும்’ என்னும் தமிழக அரசின் இந்த அறிவிப்பு, தமிழ்வழிக் கல்வியா – ஆங்கில வழிக் கல்வியா? என்ற நெடு நாள் விவாதத்திற்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

தமிழ்ச் சமூகத்தில், தாய்மொழி வழிக் கல்விக்கு ஆதரவாக, தமிழ் உணர்வாளர்கள், மொழி அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியியலாளர்கள், முற்போக்காளர்கள் என்று அறிவுசார் வட்டங்களில் ஆதரவு இருக்கின்றதே தவிர, பொது மக்களில் பெரும்பான்மையினர் ஆங்கில வழிக் கல்வியையே விரும்புகின்றனர் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மேலோட்டமாக நோக்குமிடத்து, கணினியுகத்தில் / உலகமயச் சூழலில் ஆங்கிலத்தின் தேவையும், ஆங்கிலம்தான் உலக மொழி, பொது மொழி, அறிவியல் மொழி போன்ற கருத்துருக்களும் தான், ஆங்கில வழிக் கல்விக்கு ஆதரவான மனநிலையைச் சமூகத்தில் விதைத்திருப்பதாகத் தோன்றலாம்.

ஆனால், ஒரு சமூகம் முழுமைக்குமே, தன் தாய் மொழியைக் கை-கழுவிவிட்டு, அயல் மொழியில் பயில முனைப்புக் காட்டுவதும் – மேல்தட்டு மக்கள், நடுத்தர வர்க்கம், பாட்டாளிகள் என்று வர்க்க பேதமில்லாமல், துறை / தொழில் பேதமில்லாமல், சிறுவர்கள் இளைஞர்கள் பெரியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல், ஆங்கில மோகத்தில் திளைத்திருப்பது, கடைசியில் பிரச்சனைகளில் தான் கொண்டு சேர்க்கும்.

அது அந்தச் சமூகம் சந்தித்திருக்கும் உளவியல் நெருக்கடி!. அதிகார வர்க்கம் காரிய நோக்கத்தோடு திட்டமிட்டு ஏற்படுத்திய உளவியல் நெருக்கடி!.

ஆங்கிலப் பட்டறைகளும் – ஆளனுப்பும் ஊடகங்களும்

பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான, ஆங்கிலம் தெரிந்த ‘அதிசயக் கருவி’களை உற்பத்திசெய்வதற்கும், உற்பத்தியாகும் பொருட்களை நுகர மேற்கத்திய சமூகத்தை உருவாக்குவதற்கும் தான், நம் நாட்டு முதலாளிகளின் கல்வி நிறுவனங்களும் ஊடகங்களும் இரவு பகலாகக் கண்விழித்து வேலை செய்து வருகின்றன. எதிர்கால இந்தியாவின் தூண்களில், யார் ‘அதிசயக் கருவி’யாகத் தேறி வருவார்கள் என்பது நிச்சயமில்லாத நிலையில், அத்தனை பேருக்கும் ஆங்கில மோகத்தை விதைப்பதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழியில்லை.

‘கருவி’களை உற்பத்திசெய்துகொள்ளும் அளவிற்கு, இன்னும் நமது கல்வி நிறுவனங்களின் ‘தரம்’ உயர்த்தப்படவில்லை. அதற்கான முயற்சியில் தான், தொலைக்காட்சி ஊடங்கள் இறங்கியுள்ளன. இருபத்து நான்கு மணிநேரமும் மக்களை அதற்காகப் பயிற்றுவித்துக்கொண்டுள்ளன.

தொழில்நுட்பத்தின் மகத்துவத்தைப் பாருங்கள்… இனி… விளையாட்டு, பயணம், உரையாடல், பொழுதுபோக்கு, ஓய்வு, வாசிப்பு எல்லாம், தொலைக்காட்சியில் வருபவைகள். நீங்கள் எதற்கும் சிரமப்பட வேண்டியதில்லை,

எல்லாம் தொலைகாட்சிகள் பார்த்துக்கொள்ளும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தொலைகாட்சி பார்ப்பது மட்டும்தான்.

மொத்தத்தில் நீங்கள் எங்களுக்கு வேண்டும், எப்படி வேண்டுமோ அப்படி!. அதனால் தொடர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இருங்கள். அது மனித இயல்பு.

மூளையை முடமாக்கும் லேகியம் விற்றுக்கொண்டிருக்கின்றன ஊடகங்கள்.

ஆங்கிலம் தெரியாத எந்த ஒரு கிராமமும் விடுபட்டுவிடக்கூடாது என்ற சிறப்புக் கவனத்தோடு, தமிழ் நாடு முழுமைக்கும், ‘தமிழர்களுக்காக’ ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், முடிந்தவரை ‘ஆங்கிலத்தில்’ இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்படுகின்றன.

எந்நேரமும் திரையை ஆக்கிரமித்திருக்கும் சிறிய மற்றும் பெரிய திரைக் கலைஞர்கள் சேர்ந்து அடிக்கும் ஆங்கிலக் கூத்தும், கிண்டலாக உச்சரிக்கப்படும் உரைநடைத் தமிழும், பார்க்கும் பார்வையாளர்களை, கழுத்தில் கத்தியைவைத்து ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றன.

தொலைக்காட்சியை அனைத்துவிட்டு, வீட்டின் கதவைத் திறந்து வெளியில் பார்த்தால், ஆங்கிலம் நிற்குமோ என்ற அச்சத்தை உண்டுபண்ணுகின்றன.

இப்படி, மேற்கத்திய மற்றும் ஆங்கில மோகம் சமூகத்தில் முதலாளித்துவ ஊடகங்களால், தொடர்ந்து வன்முறையாகத் திணிக்கப்படுகின்றன. இத் தொடர் வன்முறை, தமிழ்ச் சூழலில், பல அசிங்கமான உளவியல் விளைவுகளை உண்டுபண்ணியிருக்கின்றன.

தமிழ்ச் சமூகத்தின் ஆங்கில உளவியல்

தமிழ் சமூகத்தில், ஒரு பட்டதாரி, ஆய்வுகள் செய்து முனைவர் பட்டமே பெற்றிருந்தாலும், ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்றால், சான்றிதழைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு தற்குறிகளின் வரிசையில் அமர்ந்துகொள்ள வேண்டும்.

அவரை இச் சமூகம் ஒருபோதும் படித்தவராகப் பார்க்காது. அந்த முனைவரும் கூட, உளவியலாக அதற்குப் பழக்கப்படுத்தப்பட்டுவிடுவார். மொத்தத்தில் ஆங்கிலம் என்பது படித்தவர்கள் பேசும் மொழியாகவும் பட்டதாரிகளுக்கு இருக்க வேண்டிய அறிவாகவும் கருதும் மனப்பான்மை, நமது சமூகத்தில் பரவலாக நிலவுகின்றது. அதே நேரத்தில் தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டிலேயே படித்துப் பட்டம் பெற்ற ஒரு பச்சைத் தமிழனின் உச்சபட்ச மரியாதை ‘தமிழ் அவ்வளவாக எழுத வராது’ என்பதில் இருக்கின்றது.

இந்த அசிங்கமான உளவியல்,

ஆங்கில மோகத்தோடு நின்றுவிடவில்லை. தாய் மொழியை இகழவும், தாழ்வானதாகத் தரமற்றதாக நம்பவும் கற்றுக்கொடுத்துள்ளது.

ஒரு கடைக்காரரிடம் brown sheet என்று கேட்டுப்பாருங்கள். அவர், விலை மற்றும் தரம் உயர்வான polyurethane coated அட்டையைத் தருவார். அதையே ‘காக்கி அட்டை’ என்று தமிழில் கேட்டுப் பாருங்கள் polyurethane பூச்சு இல்லாத, விலை குறைவான, மட்டமான அட்டையைத் தருவார். சமூகத்தின் அனைத்து மட்டத்திலுமான, இந்த மோசமான தாக்கம் உருவாக்கப்பட்டு விட்டது.

அமெரிக்கர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்தி உருவாக்கும் நகைச்சுவைகளைப் (self deprecating jokes) போன்றது அல்ல. இது, அமெரிக்கக் கனவோடு proud to be an Indian என்று குறுஞ்செய்தி அனுப்பும், ஒரு முரண்நகை உளவியலைக்கொண்ட சமூகத்தின் அவல நிலை!

வெண்டைக் காயை ladies finger என்பதற்குச் சிரிக்காத தமிழன், சேனைக் கிழங்கை elephant foot என்பதற்குச் சிரிக்காத தமிழன், ‘கைப்பேசி’ என்ற அழகான ‘காரணப்பெயர்’-ஐ கேட்டுத்தான் சிரிக்கின்றான். ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கேட்டு, தன் மொழியைத் தானே ஏளனம் செய்து மகிழ்கின்றான்.

இந்தக் கேள்விகள் பெரும்பாலான நேரங்களில், அவனது ஆங்கில அறிவைப் போலவே, மொன்னையாகவே இருக்கின்றன.

sim க்கு நிகரான தமிழ்ச் சொல் கேட்டு குறுஞ்-செய்திகளைப் பறக்கவிடுகின்றான். subcriber identity module என்பதன் சுருக்கமான (Abbreviation) எஸ்.ஐ.எம் என்பதை, ‘சிம்’ என்று சேர்த்து வாசிப்பதில் அவனுக்குச் சிக்கல் இல்லை. வார்த்தையல்லாத ஒன்றுக்கு இணையான தமிழ் வார்த்தையைக் கேட்டுவிட்டு, அறிவார்ந்த கணையைத் தொடுத்துவிட்டதாகப் புளங்காகிதம் அடைவதிலேயே குறியாய் இருக்கின்றான்.

புதிய கண்டுபிடிப்புகளுக்கு, புதிதாய்தான் பெயரிட முடியும் என்ற, அடிப்படை அறிவு அவனுக்கு இல்லாமலில்லை. தன் தாய் மொழியைத் தானே ஏளனம் செய்து புளங்காகிதம் அடையும் பரவச நிலையில், அதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு அவனுக்கு நேரமில்லை. அல்லது அவன் எடுத்துக்கொண்ட உளவியல் பயிற்சி அவனைச் சிந்திக்க அனுமதிப்பதில்லை.

ஆங்கில வழிக் கல்விக்கான, இச் சமூகத்தின் ஆகப் பொது ஆதரவுக் கருத்தும் கூட, கிட்டத்தட்ட இதே ஞானத்தோடுதான் இருக்கின்றது. அது, ‘தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது’ என்பது. சரி, ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு?

நமது மாணவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா!

ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள், எத்தனை வருடங்கள்… எத்தனை பாடங்கள்… எத்தனை வகுப்புகள்… எத்தனை தேர்வுகள்… எத்தனை படித்திருப்பார்கள்… எத்தனை எழுதியிருப்பார்கள்… அத்தனையும் ஆங்கிலத்தில்!. அத்தனையிலும் தேர்ச்சியும் பெற்று வந்தவர்களுக்கு, ஆங்கிலம் தெரியும் என்று சொல்வதற்குத் திராணி இருக்கின்றதா?.

உண்மையில், ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள, அந்த மொழி வழியிலேயேதான் கல்வியே கற்க வேண்டும் என்பதே அபத்தம்.

சமீபத்திய ஆய்வு ஒன்று தமிழ்நாட்டு மாணவர்களைத் தற்குறிகள் என்கிறது. PISA (program for international student assessment) என்பது அந்த ஆய்வு. சர்வதேச மாணவர்களுக்கு, எழுத்தறிவு, கணிதவியல், அறிவியல் ஆகிய பிரிவுகளில் தேர்வுகள் நடத்தி, மதிப்பிட்டு, ஆறிக்கை தருவது அதன் வழக்கம். 2009-10-ல், 74 economies (பிரதேசங்கள்) கலந்துகொண்ட தேர்வில், இந்தியாவிலிருந்து இமாச்சலப் பிரதேசமும் தமிழ்நாடும் கலந்து கொண்டன.

எழுத்தறிவுத் தேர்வில், தமிழ்நாடு 72-வது இடத்தையும் இமாச்சலம் 73-வது இடத்தையும் பெற்றுள்ளன. கணிதவியல் அறிவியல் தேர்வுகள் முறையே, தமிழ்நாடும் இமச்சலமும் 72,73 – 72,74 வது இடத்தைப் பெற்றுள்ளன. எழுத்தறிவு (Literacy) என்பதற்கு PISA கொடுத்த விளக்கம் – ‘படித்த பொருளைப் புரிந்துகொண்டு, அதை வெளிப்படுத்தத் தெரிந்திருப்பது’. இதன் அடிப்படையில், இந்திய மாணவர்கள் பெரும்பான்மையினர் தற்குறிகளாக (illiterate) இருகிறார்கள் என்கிறது. தேர்வு எழுதிய மாணவர்களின் முதல் மொழியும் பயிற்று மொழியும் வெவ்வேறாக இருந்ததே, இதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எழுத்தறிவு, கணிதவியல், அறிவியல் ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் முதலிடத்தில் ஷாங்காய் (சீனா) இருக்கின்றது. பொறியியல் மருத்துவம் என்று மேற்படிப்புகள் அனைத்தையும், தன் தாய் மொழி வழியிலேயே கற்கும் சீனா எப்படி, ஆங்கில வழியில் நடந்த தேர்வில் முதலிடத்தைப் பெற்றது?. அதுதான் தாய் மொழிக் கல்வியின் மகத்துவம்!.

மொழியும் தாய்-மொழியும்

முதலில் (தாய்) மொழி என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது என்பதைப் பார்ப்போம். அயல் மொழியாக இருந்தாலும் தாய் மொழியாக இருந்தாலும் இரண்டும் மொழிகள்தான் என்றும், மனிதர்கள் தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு கருவி என்பதைத் தாண்டி, மனித வாழ்க்கையில் மொழிக்கு வேறெந்தப் பங்கும் இல்லை என்றும், பொதுவாக நிலவும் கருத்துக்கள் சரியா? என்றால், ‘இல்லை’ என்கிறார் தலைசிறந்த மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி.

மனித இனத்தின் உழைப்பு, அதன் உடல் அமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்தது போது, மனித இனத்தின் பிரிக்க முடியாத அங்கமான மொழியும், மூளையில் அதற்கென ஒரு கட்டமைப்பை உருவாக்கிக்கொண்டதில் வியப்பென்ன இருக்க முடியும். மேலும் மனித மொழிகள் அனைத்திற்கும், ஒரு பொதுவான இலக்கணம் (Universal grammar) இருப்பதாகவும் கூறுகிறார் சோம்ஸ்கி.

இதன் அடிப்படையில்தான், ‘குழந்தைகள் மனதளவில் எந்தத் தொல்லையுமில்லாமல், ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதைப்போல் தாய் மொழியை எளிமையாகக் கற்றுக்கொள்கின்றார்கள்’ என்கிறார் சாம்ஸ்கி.

மேலும், தாய் மொழியைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் வாக்கியங்களை அப்படியே பிரதி எடுப்பதில்லை, கற்றுக்கொள்ளும் போது they deduce rules from it என்கிறார் (இலக்கணத்தை – விதிகளை ஊகித்துணர்தல்). அறிவு வளர்ச்சியின் முன் தேவையாக, இயற்கையான சிந்தனைப் பசியால் உள்வாங்கிக்கொள்ளப்படும் முதல் மொழி என்பதால், அந்த rules deduction இயல்பாகவே நடந்துவிடுகின்றது..

குழந்தைகள் மரத்தைக் காட்டி என்ன என்று கேட்கும் போது, மரம் என்று சொல்லி முடித்துக்கொள்கிறோம். நாம் அதை மரம் என்று ஏன் சொன்னோம்? அதுதான் அந்தப் பொருளின் பெயர். ஆனால் ஒரு பொருளுக்குப் பெயர் இருக்கும் என்பதே குழந்தைகளுக்குத் தெரியாதே!. அறிவியல் விளக்கங்களை ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, நாம் நமது குழந்தைகளுக்கு, ஐம்பது வார்த்தைகளுக்கு மேல் கற்றுக்கொடுத்திருக்க மாட்டோம் என்பது நமக்குத் தெரியும்.

இலக்கணமும் அப்படியே! எந்த ஒரு குழந்தைக்கும் தாய்-மொழி பிறரால் வலிந்து கற்றுக்கொடுக்கப்படுவதில்லை.

குழந்தைகள் தங்கள் தாய் மொழியைத் தாங்களே தங்கள் சமூகத்தோடு சேர்ந்து இயல்பாகக் கற்றுக்கொள்கிறார்கள், அல்லது முயன்று அடைகிறார்கள் என்பது தெளிவு. (தாய் மொழி என்பதற்கான சரியான விளக்கம் இதற்குள்ளாகத்தான் இருக்க முடியும்)

எனவே தாய்-மொழி என்பது, வெறும் மொழியாக அல்லது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் கருவியாக மட்டும் இருக்க முடியாது. அது கிட்டத்தட்ட, ஒரு மனிதனின் அடிப்படை அறிவுத் திறனாக அமைகின்றது. மற்ற எதையும் அவன் இதன் வழியாகத்தான் கற்கின்றான்,

அது இன்னொரு மொழியாகவே இருந்தாலும். கற்றலில் அவன் தொடும் எல்லையைத் தீர்மானிப்பதில், தாய் மொழித் திறன் முக்கியப் பங்காற்றுகிறது. இங்குக் கற்றல் என்று நாம் குறிப்பிடுவது, கல்வி கற்றல், அறிவுசார் கற்றலைத் தான். மிதிவண்டி கற்றலை அல்ல. அது கற்கக் கூடியதும் அல்ல, பயின்று, பழகக் கூடியது. இரண்டையும் போட்டுக் குழப்பிகொள்ளக் கூடாது.

குழந்தைகள் மீதான வன்முறை

இயற்கையாக, அனைத்தையும் தன் தாய் மொழியில் புரிந்துவைத்திருக்கும் குழந்தைகளுக்கு, பள்ளிக் கூடங்களில் அயல் மொழியில் கற்பிக்கும் போது, அவர்களின் சிந்தனை தொந்தரவிற்குள்ளாகின்றது.

இது, குழந்தைகளின் சிந்தனையில் நாம் செலுத்தும் கொடிய வன்முறை ஆகும்.

தொடர்ந்து கட்டாயப்படுத்தித் திணிக்கப்படும் அயல் மொழி வழி கற்பிக்கும் ‘முயிற்சி’, படிப்படியாகக் குழந்தைகளின் தாய் மொழித் திறனையும் காலி செய்துவிடுகின்றது. முடிவாக அவர்கள் கற்பதையே (learning) நிறுத்திவிடுகின்றனர். ஆசிரியர்களும் கற்பித்தலை (teaching) நிறுத்திவிடுகின்றனர்.

பிறகு நடப்பதெல்லாம் மதிப்பெண்களை நோக்கிய பயிற்சிதான் (coaching). அவர்கள் எடுக்கும் பயிற்சி, புத்தகங்களில் இருப்பதைப் பிரதி எடுப்பதற்குத்தான். எடுக்கப்படும் பிரதிகள் ஆங்கிலத்தில் இருந்துவிடுகின்றன அவ்வளவுதான்.

மற்றபடி ஆங்கிலப் புலமையெல்லாம் ஆங்கிலம் கற்பதால் சாத்தியமே தவிர, ஆங்கில வழியில் பிரதி எடுப்பதால் (கற்பதால்?) அல்ல. பிற்காலத்தில் தங்களை அதிசயக் கருவிகளாகிக்கொள்ள, எப்படிச் சிரிப்பது, எப்படிக் கை-குழுக்குவது, எப்படிப் பார்ப்பது, எப்படித் தன்னை விற்பது! (interview skills ) என்று, பட்டைதீட்டி நிமித்துவதற்கு முன் தேவையாக – சுய மரியாதை, சுய சிந்தனை, படைப்புத்திறன் ஆகியவற்றை, அடித்து நொறுக்கி அழித்தொழித்துப் புடம்போடப்படும் இடமாகத்தான் இந்தப் பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன.

கற்றலில் மொழி

பள்ளி என்பது கற்றலைக் கற்பிக்கும் இடம் தான், உண்மையான கல்வி பள்ளியை விட்டு வெளியேறிய பிறகே நடக்கிறது – என்கிறார்,

கல்வியியலாளர் ஜான் டூவி (john dewey). அயல் மொழி வழியில் கற்கும் மாணவர்களைப் பொறுத்தவரையில், பள்ளிகுள்ளும் சரி, பள்ளிக்கு வெளியிலும் சரி, கற்றல் அதன் உண்மையான பொருளில் நடப்பதே கிடையாது.

எந்த ஒரு மொழியிலும் பாண்டித்தியம் இல்லாத ஒருவரால், எதையும் முழுமையாகக் கற்க முடியாது. ஒரு ஆழமான புத்தகத்தைக் கூடப் படித்துப் புரிந்துகொள்ள முடியாது. வாசிக்கும் மொழியில் பாண்டித்தியம் அல்லது வாசிக்கப்படும் பொருளில் அடிப்படை அறிவு, இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றாவது இல்லாமல், தினத்தந்தி செய்தியைக் கூட முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

PISA தேர்வில் நமது மாணவ மணிகளின் நிலை இதுவாகத்தான் இருந்திருக்கின்றது. சீன மாணவர்கள் தாய் மொழி வழியில் படித்திருந்தாலும், தேர்வுப் பொருள் பற்றி அவர்களுக்கிருந்த அடிப்படை அறிவு, ஆங்கிலத்தைச் சுலபமாக எதிர்கொள்ளச் செய்திருக்கின்றது. தாய் மொழியில் கற்ற கல்வி, அம் மொழியில் அவர்களுக்கிருந்த பாண்டித்தியம், தேர்வுப் பொருள் பற்றிய அடிப்படை அறிவிற்கு ஆதாரமாக இருந்திருக்கின்றது.

ஏதேனும் ஒரு மொழியில் பாண்டித்தியம் என்பது கற்றலுக்கு அவசியமான ஒன்று. தாய் மொழியில் பாண்டித்தியம் பெறுவதே இயற்கையானதும் எளிமையானதும் ஆகும். அதற்குத் தாய் மொழி வழியில் கற்பதே சிறந்த வழி.

இப்படிக் கூறுவதானது, தாய் மொழியைத் தவிர, வேறு மொழிகளில் பாண்டித்தியம் பெற முடியாது என்பதாகுமா?. அப்படியில்லை. ஒரு நூலை எவ்வாறு கற்பது என்பதற்கே, 1000 பக்கங்களில் விளக்கப் புத்தகங்கள் தேவைப்படுகிற நூல், காரல் மார்க்ஸின் Das capital. அவ்வளவு கடினமான நுட்பமான நூலை, ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்க, பதின்ம வயதில் தன் வாழ்வை புரட்சிப் பணிக்கு அர்பணித்த, தோழர் தியாகு-விற்கு முடிந்திருக்கின்றது. (Das capitalai-ஐ பொருத்தவரை, இந்திய மொழிகளிலேயே, இது தான் முதல் முழுமையான மொழிப் பெயர்ப்பு.

தோழர் தியாகு தான், தமிழகத்தின் முதல் தாய்த் தமிழ்ப் பள்ளியைத் தொடங்கியவர். அதே பள்ளியில், தனது மகளை முதல் மாணவியாகச் சேர்த்தவரும் கூட). ஆக, அயல் மொழியில் பாண்டித்தியம் என்பது சாத்தியமே. ஆனால் இது போன்ற விதிவிலக்கான சாத்தியப்பாட்டை நோக்கி, ஒரு சமூகத்தையே அயல்-மொழியில் நகர்த்துவது முட்டாள்த்தனம் என்கிறோம்.

ஆங்கிலத்தையோ வேறு ஏதேனும் அயல் மொழியையோ கூடக் கற்றுக்கொள்வது, இக் காலங்களில் அவ்வளவு கடினமானது அல்ல. கைப்பேசி போன்ற பல மின்னியல் உபகரணங்கள் (gadgetries), எப்போதும் கைகளில் இருக்கும்படியான மின்னியல் அகராதிகள், இணையதளப் பயன்பாடு, ஆசிரியர்களைத் தொடர்புகொள்ள எளிமைப்படுத்தப்பட்ட வசதிகள், பன்மொழி திரைப்படகளையும், செய்திகளையும் பார்க்கும் வாய்ப்புகள் போன்றன,

அயல் மொழி கற்றலை எளிமை படுத்த கூடியனவாக இருக்கின்றன. எனவே ஆங்கிலத்திற்காக, ஆங்கில வழியிலேயே கல்வியைத் தேர்ந்தெடுத்துத் தற்குறிகளாக வேண்டிய அவசியமில்லை. நம் சமூகத்திற்கு, ஆங்கிலம் பயன்படலாமே தவிர, ஆங்கில அயல் மொழி மொழிக் கல்வி, கேடு விளைவிக்கவே செய்யும். எந்த ஒரு சமூகத்திற்குள்ளும், அதன் சமூக (தாய்) மொழியைப் புறக்கணித்து, அயல்மொழி வழிக் கல்வியைத் திணிப்பது, அச் சமூகத்தின் ஆழுமையைச் சீரழிக்கக் கூடியது. சமூகத்தோடு ஒண்றி வாழாத, உற்பத்தியில் பங்குகொள்ளாத, மேல்தட்டு மக்களுக்குச் சாதகமானது. உழைக்கும் பாட்டாளி மக்களைப் பலகீனப்படுத்தக்கூடியது. சமூகத்தின் பெருவாரி மக்களை அறிவிலிகளாக்கி, போராட்ட உணர்வை மழுங்கடித்து, ஒட்டச் சுரண்ட வழிவகுக்கக் கூடியது.

ஜெர்மெனி, பிரான்ஸ், சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளில், மேற்படிப்புகள் கூட, தாய் மொழியில் கற்க முடிகின்றது. (ஆங்கிலமே இயல்பு மொழியாகவுள்ள (de facto), இங்கிலாந்து அமெரிக்கா ஆஸ்திரேலியாவையும் கூட இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் தானே?).

உலகிலேயே, வளமையான மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட தேசிய இனங்களுக்கு, அடிப்படைக் கல்வியையே அயல் மொழியில் கற்பிக்கும் நாடு, இந்தியா மட்டும் தான்!. வேறெந்த நாட்டிலும் இந்த அவலம் இல்லை. இதை மக்களின் விருப்பம் என்பது, எல்லோரையும் சொல்லி ராசா குசு விட்ட கதை (சொலவடை) தான்.

இது நமக்கான உரையாடல். நமது மொழி – நமது பலம், நமது கல்வி – நமது உரிமை. அமெரிக்கா சென்றால் என்ன செய்வது… ஆஸ்திரேலியா சென்றால் என்ன செய்வது… டெல்லியில் குடியேறினால் என்ன செய்வது… குஜராத்தில் குடியேறினால் என்ன செய்வது… என்ற, சொற்ப மேல்தட்டு கனவான்களின் சுய அரிப்பிற்காக, நமது உரிமையை விட்டுக்கொடுத்துச் சீரழிய முடியாது. இக் கனவான்கள், அங்குள்ள உழைக்கும் மக்களோடும் கூட ஒன்றி வாழப் போவதில்லை, ஒட்டச் சுரண்டும் ஒட்டுண்ணியாகவே செல்கிறார்கள், என்பது திண்ணம். .

ஆப்பிள் கணினி தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்த ஸ்டீவ் ஜாப்ஸ்-காகக் கண்ணீர்விடும் இக் கனவான்களுக்கு, நமது ஆறுகளின் அவலநிலையைப் பற்றிக் கவலையில்லை.

கணினி தொழில் நுட்ப புரட்சியின் பிதாமகன் பில் கேட்ஸ் எந்தத் தேதியில், எங்கே ஒண்ணுக்குப் போனார் என்று தெரிந்த இவர்களுக்கு, தனது மாவட்டத்தில் எத்தனை ஆறுகள் ஓடுகிறன என்பது தெரியாது.

இவர்களின், ஐரோப்பிய கனவிற்கு, நமது தேசியத்தைச் சாட்டையால் அடித்தா சாத்தியப்படுத்த முடியும்?.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book