22

மூத்தவளுக்குப் பள்ளி செல்ல மிதி வண்டி வேண்டுமாம்.

கடந்த நாலைந்து வாரமாக வீட்டுக்குள் ஒரே அமளி. நான் கண்டு கொள்ளவே இல்லை. காரணம் பள்ளிக்கும் வீட்டுக்கும் இருக்கும் தொலைவு ஐநூறு மீட்டர் மட்டுமே. மூன்று வருடங்களுக்கு முன்பே வாங்கிய மிதிவண்டி வேறு வீட்டுக்குள் இருக்கிறது.

ஆனால் மூன்று பேர்களின் கைங்கர்யத்தில் அது பரிதாபமாக வீட்டு முலையில் பரிதாபமாகக் கிடக்கின்றது. சும்மா சொல்லக்கூடாது. பிரித்து மேய்ந்து விட்டார்கள். வீட்டருகே உள்ள முக்கியச் சாலைகள் தவிர அத்தனை சந்துகளிலும் இவர்களின் ராஜ்யங்களை நடத்தி முடித்து விட்டார்கள்.

தற்போது இருவர் மிதி வண்டியை அநாயாசமாகக் கையாள்கிறார்கள். ஒருவருக்கு மட்டும் இன்னும் கைகூடவில்லை. மெதுவாகவே கற்றுக் கொள்ளட்டும் என்று நானும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இப்போது மூத்தவளின் எதிர்பார்ப்பு வேறு விதமாக உள்ளது. நான் மிதி வண்டியை பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். புது வண்டி தான் வேண்டும் என்ற கோரிக்கையுடன் நச்சரிக்கத் தொடங்கினாள்..

“என்னுடன் படிக்கும் தோழிகள் பலரும் எடுத்து வருகிறார்கள். நானும் இந்த வருடம் எடுத்து வரப்போவதாகச் சொல்லி விட்டேன்” என்று வீட்டின் நிதி மந்திரியிடம் சொல்லி வைக்க அதுவே இப்போது விஸ்ரூபமாக வந்து நிற்கிறது.

இந்தப் பிரச்சனையை மனைவி தான் தொடங்கி வைத்தார். அசந்தர்ப்பமாகப் பள்ளி இறுதித் தேர்வின் போது கொடுத்த வாக்குறுதியிது. இப்போது புயலாகத் தாக்கிக் கொண்டு இருக்கிறது.

“அம்மா நீங்க சத்தியம் செய்து கொடுத்துருக்கீங்க. மீற மாட்டீங்க தானே” என்றவளை பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தேன். மூத்தவள் மனைவியுடன் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறாள். கடந்த ஒரு வாரமாகவே நினைவூட்டிக் கொண்டு இருந்தவள் இப்போது அடிதடியில் இறங்கி விட அபயக்குரலுடன் மனைவி என்னருகே வந்து விட்டார். காரணம் பள்ளி நாளை திறக்கப் போகிறார்கள்.

கீழ் சபையில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு என் பார்வைக்கு வந்துள்ளது. நானும் கடத்திக் கொண்டே வந்து விடத் தற்போது உச்சகட்ட போராட்டமாய் வீட்டில் சட்டம் ஒழுங்க கெட்டு 144 தடையுத்தரவு போடும் அளவுக்கு வந்துள்ளது. மகளின் வார்த்தைகளை மனைவியால் எதிர்கொள்ள முடியாமல் என்னை உதவிக்கு அழைத்தார். மகளிடம் ஒரு விதமான சாமர்த்தியம் உண்டு. ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் முதலில் அறிவிப்பாக வெளியிடுவாள். பிறகு சந்தர்ப்பம் பார்த்து நினைவூட்டுவாள்.

பிறகு எப்போது வாய்ப்புண்டு என்பதை நோட்டம் விட்டுக் கொண்டு அதற்கான நேரத்தை வாக்குறுதியாகப் பெற்றுக் கொள்வாள். பெற்ற வாக்குறுதியை அலைபேசியில் நினைவூட்டலாகப் பதிந்து வைத்து விடுவாள்.

மறந்து விடுவாள் என்று நினைத்துக் கொண்டே இருப்போம். அவளும் மறந்து விடுவாள். ஆனால் அலைபேசி ஒலி அவளுக்கு மறுபடியும் நினைவூட்டி விடும். மறுபடியும் ரணகளம் தொடங்கும்.

அந்த ரணகளம் தான் நடந்தது. நான் தாமதப்படுத்தியத்திற்கு வேறு சில காரணங்களும் இருந்தது. முக்கியமாகப் பள்ளியில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை பள்ளிச் சீருடையை மாற்றுகிறார்கள். என்ன யுக்தியோ தெரியவில்லை?. சுளையாக ஒரு பெரிய தொகையைச் செலவளிக்க வேண்டியுள்ளது. சாதாரணப் பள்ளிச் சீருடைகள், விளையாட்டு நாள் சீருடை என்று ஒவ்வொரு நாளுக்கும் தனித் தனியான உடைகள். உடைகளைப் பள்ளியில் தான் வாங்க வேண்டும்.

இதைவிட மற்றொரு கொடுமையுண்டு. இந்தச் சீரூடைகளைத் தைப்பவரிடம் கொடுத்து வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்ப்பதென்பது சவாலான விசயமாக இருக்கிறது. காரணம் பள்ளிக்கருகே இருக்கும் அவரிடம் மலை போலக் குவிந்து கிடக்கும் உடைகளைப் பார்க்கும் நமக்குக் கண்ணைக் கட்டும். அங்கே தைக்கக் கொடுக்கும் மொத்த சீரூடைகளையும் பார்க்கும் போது மலைப்பாகவே உள்ளது.

குறிப்பிட்ட மாதங்களில் அவரின் உழைப்பையும், வருமானத்தையும் கணக்கிட்டுப் பார்த்தால் வியப்பாக இருக்கும். உத்தேச கணக்காக அவருக்குச் சுமாராக இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் ரூபாய் வருமானம்.

நடுத்தர வர்க்கத்தில் இயல்பான வருமானம் உள்ள பெற்றோர்கள் இந்தச் செலவீனங்களைப் பார்த்து தடுமாறி விடுகின்றார்கள்.

இது போன்ற சமயங்களில் தான் என்னுடைய பள்ளிக்கூட நாட்களில் தபால் பெட்டி டவுசரோடு பள்ளிக்குச் சென்ற காலம் நினைவுக்கு வந்து போகின்றது. தற்போது குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கும் பள்ளியென்பது திருப்பூரில் உள்ள மற்றப் பள்ளிகளை விட இயல்பான பள்ளிக் கட்டணம் இருக்கிறது.

நன்கொடை என்பது இல்லை. தேவையில்லாத அக்கிரம செயல்பாடுகள் எதுவுமே இல்லை. இருந்த போதிலும் வருடந்தோறும் குறிப்பிட்ட வகையில் பள்ளிக்கட்டண தொகையை ஏற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எதனால் என்று புரியவே இல்லை. ஆனால் உள்ளே பணிபுரியும் எந்த ஆசிரியர்களுக்கும் அவர்களின் ஊதியத்தை உயர்த்தவில்லை.

நகர்புறங்களில் வாழும் எல்லா அப்பாக்களின் வாழ்க்கையுமே பட்ஜெட் பத்மநாபன் வாழ்க்கை தான். எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டு பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். ஆனால் சூழ்நிலை வேறு விதமாக இருந்தது. வீட்டுக்குள் நடந்த உரையாடல்களைக் கவனித்துக் கொண்டே குளியலறைக்கு நகர முற்பட்ட என்னை மனைவியும் குழந்தைகளும் நகர விடாமல் தடுத்தார்கள். சட்டென்று சமாளிக்க இரண்டு வாரத்திற்குக் கடைபிடிக்க வேண்டும் என்று அதிரடி திட்டத்தை அமல்படுத்தினேன்.

ஒவ்வொருவரும் அடுத்த ஒரு வாரத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டுக் கொடுத்தேன். குறிப்பாக மூன்று பேர்களுக்குள் சண்டை வரக்கூடாது. தினந்தோறும் இரண்டு முறை குளிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு முறையாவது தியானம் செய்ய வேண்டும் என்பது போன்ற பல கட்டளைகள்., அப்படா…. இப்போதைக்குத் தப்பித்தாகி விட்டது என்று நகர்ந்தேன்.

ஆனால் என்ன ஆச்சரியம்?

ஒவ்வொரு நாளும் அட்சரம் பிறழாமல் எல்லாவற்றையும் கடைபிடித்து என்னைக் கலங்கடித்தார்கள். அத்துடன் மற்றொரு காரியத்தையும் கூடவே செய்தார்கள். அலுவலகத்தில் இருக்கும் எனக்குக் குறுஞ்செய்தி மூலம் இதை முடித்து விட்டோம் என்ற சாட்சி கடிதம் வேறு. எனக்குப் புரிந்து விட்டது. இந்த வாரம் மாட்டிக் கொள்ளப் போகின்றோம் என்று. சென்ற வாரம் கடைக்குச் சென்ற போது ஞாயிறு என்பதால் கடை மூடியிருந்தது. மூத்தவளின் மூஞ்சி சுருங்கிப் போனதை மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேன். ஒரு பொருளை அடைவதற்கு முன்பு இருக்கும் அவளின் முஸ்தீபுகளைக் குறித்துக் கொண்டேன்.

அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை? இன்று காலையில் பக்குவமாக நடந்து மூவரும் சேர்ந்து அதே கடைக்கு அழைத்துச் சென்றார்கள்.

எப்போதும் போலவே பூட்டியிருந்தது.

அப்பா இங்கே வாங்கப்பா என்று நாலைந்து கடைகள் தாண்டி மற்றொரு மொத்த கொள்முதல் கடைக்கு அழைத்துச் சென்ற போது தான் எனக்குப் புரிந்தது. ஏற்கனவே வீட்டுக்கருகே இருந்தவர்களிடம் விசாரித்துத் திட்டமிட்டு இங்கே கொண்டு வந்து நிறுத்திய விதம். அமைதியாய் பணத்தைக் கட்டி விட்டு உள்ளே கவனித்தேன்.

எந்த வகையான வண்டி, என்னென்ன வசதிகள் அதில் இருக்க வேண்டும் என்று உள்ளே மிதி வண்டியை கோர்த்துக் கொடுப்பவர்களிடம் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அங்கே இருப்பதை மூவருமே கண்டு கொள்ளவேயில்லை என்பது தான் யான் பெற்ற இன்பம்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book