14

சமச்சீர் கல்வி, என்ற வார்த்தை இன்று கிராமம் முதல் டெல்லி உச்ச நீதி மன்றம் வரைக்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதைப்பற்றிப் பேசுவதற்கு முன்பு வேறு சில விசயங்களைப் பார்த்து விடலாம்.

இந்த இடத்தில் என்னை நானே உதாரணமாக எடுத்துக் கொள்கின்றேன்.

8வது வகுப்பு இறுதி வரைக்கும் நான் பெற்ற ரேங்க என்பது வகுப்பில் இரண்டாம் இடம். சில சமயம் மூன்றாவது இடம். அப்படி என்றால் வகுப்பாசிரியர் பார்வையில் நான் சிறப்பான மாணவன் தானே? ஆனால் அது தவறு? அது எப்போது எனக்குத் தெரிய வந்தது? இந்தப் பள்ளியில் இருந்து அடுத்தப் பள்ளிக்கு மாறிய போது தான் என் சுய தகுதியும், என்னுடைய அறிவும் எனக்குத் தெரிய வந்தது. எட்டாவது வகுப்பு வரைக்கும் எனக்குச் சொல்லிக் கொடுத்த எந்த ஆசிரியர்களை நான் நினைத்துப் பார்க்கும் அளவிற்கு எந்தப் பெருமையும் இல்லை. என்னவோ சொல்லிக் கொடுத்தார்கள். நானும் படித்தேன் என்கிற இந்த அளவுக்குத்தான் இருந்துள்ளது.

ஆனால் முதல் பகுதியில் தினந்தோறும் படிக்கும் பாடங்களை விட, மற்ற விசயங்களைத் தான் இங்கு அதிகம் கற்றுள்ளேன். திருக்குறள், வாய்ப்பாடு, பேச்சுப்போட்டி, நாடகப் போட்டி போன்ற பல விசயங்களுக்கு ஆசிரியர்கள் எனக்கு நல்ல உந்துதலாக இருந்துள்ளனர். இதற்கு மேலாக ஒழுக்கம், பள்ளி வருகையில் கண்டிப்பு என்கிற ரீதியில் என் வாழ்க்கையின் வேராக இருந்துள்ளனர். எந்த நிர்ப்பந்தமும் இல்லை. எது குறித்தும் அச்சப்பட வேண்டியதில்லை. மொத்தத்தில் சுதந்திர வாழ்க்கையைச் சுகத்தோடு அனுபவித்து வந்துள்ளேன். கல்வி என்பது ஒரு பாரமாக இல்லாமல் அது வாழ்க்கையோடு இணைந்த ஒரு வாழ்க்கையாக வாழ்ந்துள்ளேன். கற்ற கல்வியோடு எங்கள் குடும்பத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்துள்ளேன்.

நிர்ப்பந்தம் இல்லாமல் வாழ்ந்த கல்வி வாழ்க்கையின் பலனை அடுத்தப் பகுதியில் வேறு விதமாக அனுபவித்துள்ளேன். அடுத்து ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன். இந்தப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக முரட்டுத்தனம் நிரம்பிய கூட்டம். ஒவ்வொரு வகுப்பிலும் அதிக மாணவர்களின் எண்ணிக்கை காரணமாகச் செக்சன் வாரியாகப் பிரித்து இருந்தார்கள். அருகில் இருந்த கிராமங்களில் இருந்து வந்து படித்த மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

படிப்பு, விளையாட்டு என்று ஒவ்வொரு விதத்திலும் ஒவ்வொரு மாணவனும் சூரர்களாக இருந்தார்கள். எட்டு வரைக்கும் படித்த பள்ளிக்கூடத்தில் பல விதங்களிலும் நான் ஹீரோவாக இருந்த நான் இங்கு ஜீரோவாக மாறிப் போனேன். நான் பெற்றுருந்த கல்வியறிவு என்று பார்த்தால் ஒன்பதாம் வகுப்புச் சென்ற போது தான் எனக்குத் தெரியத் தொடங்கியது. ஒன்பதாம் வகுப்புக்குச் சென்ற போது தான் ஆங்கிலம் என்றொரு வஸ்துவை முதன் முதலாகக் கண்டு கொண்டேன். ஆங்கிலத்தில் இலக்கணம் என்று இருக்கிறது. அது தெரிந்தால் தான் ஆங்கிலம் பேச எழுத முடியும் என்பதே இங்கு தான் எனக்குப் புரிந்தது. காலம் கடந்து பெற்ற ஞானம்.

ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி விட்டுச் செல்வார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டுருப்பேன். தமிழ் பாடத்தைத் தவிர வேறு எந்தப் பாடங்களும் மண்டையில் ஏறினபாடில்லை. அறிவியல் போன்ற பாடங்கள் எனக்கு அறியாத விசயங்களாக இருந்தது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் சாதாரணத் தேர்வுகள் முதல் கால், அரைப் பரிட்சை என்று நடக்கும் எந்தத் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்றதே இல்லை. ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்கள் நூற்றுக்கு 20. ரேங்க் அட்டை கொடுக்கும் சமயத்தில் வகுப்பாசிரியர்கள் திட்டுவார்கள். குட்டு வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்து விடுவேன்.

பத்தாம் வகுப்பில் மொத்த மதிப்பெண்கள் என்ற ரீதியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்த போதிலும் அப்போது வாங்கிய ஆங்கில மதிப்பெண்கள் நூற்றுக்கு 40 என்கிற அளவுக்குத்தான். பத்தாம் வகுப்பில் பெற்ற குறைவான மதிப்பெண்களின் காரணமாக மற்ற நண்பர்கள் பாலிடெக்னிக் சென்றார்கள். நான் எப்போதும் போலப் பதினொன்றுக்குள் நுழைந்தேன். இந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் சுதாரிப்புத்தனம் இருந்தது.

இந்த இரண்டு வருட காலகட்டத்தில் தான் உண்மையான படிப்பின் அஸ்திவாரமே எனக்குக் கிடைத்தது என்று சொல்லமுடியும். ஆனால் முழுமையாக அல்ல. அதற்கும் நானே தான் காரணம்.

பிராக்டிக்கல் நோட்டு, படம் வரைய வேண்டிய விசயங்களை அக்காவிடம் கொடுத்து விடுவேன்.

ஒவ்வொரு ஆசிரியர்களையும் நன்றாகப் பழகி வைத்திருந்தேன். அவர்கள் சொல்லும் அவர்களின் தனிப்பட்ட வேலைகளை முடித்துக் கொடுத்து விடுவேன். ஆக நான்கு அறிவியல் பாடங்களுக்கும் வரவேண்டிய ப்ராக்டிகல் மதிப்பெண்கள் சுளையாக வந்து விடும். மீதி தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே.

தொடக்கம் முதல் என் எழுத்து அழகாக இருக்கும். தமிழ்மொழி வகுப்பு எனக்குப் பிடித்த காரணத்தால் நிச்சயம் அதிக மதிப்பெண்கள் வந்து விடும். மேலும் ஒன்பது முதல் 12 வரைக்கும் தமிழ் பாடத்திற்கு என்று வந்த ஆசிரியர்கள் இன்றைய இந்த எழுத்துக்கு உரமாக இருந்தவர்கள் என்று கூடச் சொல்லலாம்.

அந்த அளவுக்குத் தமிழ் மொழியை ராகமாக, கதையாக, கட்டுரையாக அனுபவித்து நடத்தியவர்கள். கடைசியாக ஆங்கிலப் பாடம். எப்போதும் போலத் தத்தக்காபித்தக்கா என்று கோலம் போட்டுப் பாஸ் என்கிற நிலையில் பனிரெண்டாம் வகுப்பும் தேறியாச்சு. இங்கேயும் தேர்ச்சி என்கிற நிலையே தவிரச் சிறப்பான மதிப்பெண்கள் என்கிற நிலையில் அல்ல. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?.

ஆனால் நான் கல்லூரிக்குள் நுழைந்த போது புத்தருக்கு கிடைத்த ஞானோதயம் எனக்குக் கிடைத்தது. கல்லூரியில் உள்ள சூழ்நிலை, சுதந்திரம், ஆசிரியர்கள், அங்கே இருந்த நூலகம் என்று இன்று வரைக்கும் எனக்குள் தீராத ஆச்சரியத்தை உருவாக்கிய கோவிலது.

உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரிக்குள் ஒரு முறை சென்று பார்த்து வாருங்கள்.

ஒவ்வொரு வகுப்புறையின் விசாலம் மற்றும் மொத்த கல்லூரியின் பிரமாண்டம், மற்ற வசதிகளைப் பார்த்து ஆச்சரியப்படக்கூடும். மொத்த மூன்று வருடமும் நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. பனிரெண்டாம் வகுப்பில் எல்லாப் பிரிவுகளிலும் படித்த நண்பர்கள் கல்லூரியில் சேர்ந்தோம்.

இயல்பியல், வேதியியல் தொடங்கிக் கணக்கு வரைக்கும் எல்லாத்துறைகளிலும் நுழைந்தார்கள். நான் மட்டும் எளிதாக இருக்க தாவரவியல் துறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். கல்லூரிக்குள் நுழைந்த முதல் ஆறு மாதங்களில் முதல் செமஸ்டர் தேர்வு வந்தது. நான் மட்டும் தான் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றேன். ஒவ்வொரு துறையிலும் சேர்ந்தவர்கள், என்னை விடப் பலமடங்கு பனிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் என்று அத்தனை பேர்களும் ஒரு பாடம் முதல் நாலைந்து பாடங்கள் வரைக்குக் கோடு வாங்கி இருந்தார்கள். காரணம் கல்லூரியில் அவர்களுக்கு ஆங்கில மொழியென்பது பிரச்சனையாக இருந்தது.

என் வாழ்வில் கல்வி ரீதியாகப் பெற்ற முதல் பெருமை இதுவே தான். இதைக் கல்லூரி இறுதி வரைக்கும் தக்க வைத்திருந்தேன். கல்லூரி ஆசிரியர்கள் பல நிலைகளிலும் என்னுடன் நட்பு பாராட்டினார்கள்.

காரணம் நான் கல்லூரியில் நுழைந்த முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் மிகுந்த சிரத்தையெடுத்துப் படிக்கத் தொடங்கினேன். கல்லூரி ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த விதம், அவர்கள் என்னுடன் பழகிய விதம் என்று என்னுடைய ஆர்வத்திற்கு எல்லா விதங்களிலும் நல்ல முறையில் தீனி போட்டார்கள். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் லெக்சரர் பாடம் நடத்தும் போது என்னுடைய வகுப்பறையில் அப்படியே நோட்ஸ் போல் எழுதுவது மொத்த மாணவர்களில் நான் ஒருவன் மட்டுமே.

பாடம் நடத்தி விட்டு லெக்சரர் வெளியே சென்றதும், என்னுடைய நோட்டை வாங்க மற்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். நான் ஒருவன் கையில் கொடுத்து விட்டு சென்று விடுவேன்.

இதற்கு மேலாகக் கூண்டுக்குள் அடைத்து வைத்துக் கொண்டு மிரட்டி படிக்க வைக்காமல் இது சார்ந்த புத்தகங்கள் நமது நூலகத்தில் இருக்கிறது என்று கல்லூரியில் இருந்த லெக்சரர்கள் எனக்கு வழிகாட்டினார்கள். இதற்கு மேலாக ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்று என் மனதில் ஏற்படுத்திக் கொண்ட வைராக்கியம்.

புரிகின்றதோ இல்லையோ மன்ப்பாடமாக உள்ளே ஏற்றிக் கொண்டு, அது மறந்து போனாலும் மீண்டும் மீண்டும் அர்த்தம் புரிந்து கொள்ள டிக்சனரியை வைத்துக் கொண்டு அலைந்து திரிந்தது என்று ஒவ்வொன்றாக இப்போது நினைவுக்கு வந்து போகின்றது.

எனது பள்ளிக்கூடக் காலகட்டங்களில் விளையாட்டு மைதானம் பக்கம் போனதே இல்லை. ஆனால் கல்லூரி காலகட்டத்தில் தினந்தோறும் காலை மாலை என்று நான் படித்தது முழுக்க முழுக்கப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் தான். பல மணி நேரம் தவமாய்த் தவம் இருந்து இருக்கிறேன். ரயில் நிலைய நடை மேடைகளில் தொடர்ச்சியாக இருட்டு வரும் வரைக்கும் படித்து இருக்கிறேன்.

வீட்டில் அறிவுரை சொன்ன போதும் கேட்காமல் அலைந்து திரிந்தவனுக்குச் சுய ஆர்வம் வந்த போது அதன் வீர்யம் அதிகமாய் இருந்தது.

கல்லூரியில் நடனராஜ், வடிவேல் என்ற இரு லெக்சரர்களைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இருவரும் வெவ்வேறு துருவங்கள். இவர்கள் பாடம் நடத்தும் போது மொத்த வகுப்பறையே நிசப்தமாக இருக்கும். குறிப்பாக வடிவேல் கலர் கலர் சாக்பீஸ் ல் படம் வரைந்து பாகம் குறித்து அவர் நடத்தும் விதங்களை வைத்தே அந்தப் பாடங்களை வீட்டுக்கு வந்து படிக்காமலே பரிட்சை எழுதிவிட முடியும். இன்டெர்னல் தேர்வில் இருபதுக்கு இருபது எடுத்துள்ளேன்.

அடுத்து எனது துறைக்கு ஆன்சிலரி பாடமாக இருந்த வேதியில் பாடம். இந்தத் துறைக்குத் தலைவராக இருந்தவர் பெயர் சீனிவாசன். பனிரெண்டு வரைக்கும் எனக்கு வேதியில் பாடம் என்றாலே பேதி போய்விடும். கணக்கு என்பதற்கு பயந்து தான் சயின்ஸ் குரூப் எடுத்தேன்.

பனிரெண்டாம் வகுப்பில் நான் எடுத்திருந்த சயின்ஸ் குரூப்பில் இருந்த வேதியியல் பாட சமன்பாடுகள் என்னை சல்லடையாகத் துளைத்தது. ஆனால் கல்லூரியில் சீனிவாசன் வேதியியல் பாடம் நடத்திய போது இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்க மாட்டாரா? என்று ஆர்வம் உருவானது. இவர் நடத்தும் பாடங்கள் ஒருவருக்குப் புரியவில்லை என்றால் அவனுக்கு மனக்கோளாறு என்று அர்த்தம்.

அந்த அளவுக்குப் பொறுமையாக எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும் அலுக்காமல் சொல்லி புரிய வைத்துக் கொண்டேயிருப்பார். ஆனால் இது போன்ற சுதந்திரங்கள் பனிரெண்டாம் வகுப்பு வரையில் கிடைத்ததே இல்லை. பள்ளிக்கூடத்தில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் புத்தகத்தில் உள்ளதை அப்படியே ஒப்பித்து விட்டுச் செல்பவர்களாகத்தான் இருந்துள்ளனர். அவர்களின் தரம் அனைத்தும் நான் கல்லூரி வந்த போது தான் எனக்குப் புரிந்தது.

திறமையானவர்கள் ஆசிரியர்களாக இல்லாத போது கல்வி மட்டும் சமச்சீராக இருந்து என்ன பலன்? ஆனால் இப்போது போலத் தொடக்கக் கல்வியில் நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் 1980 ல் இல்லை. கட்டாயம் டியூசனுக்கு வந்தே ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயப் படுத்தியவர்களும் இல்லை.

காமாந்த நபர்களாகவும் இருந்ததில்லை. . பனிரெண்டு வகுப்பு வரைக்கும் நான் பார்த்த ஆசிரியர்களிடத்தில் எத்தனையோ குறைபாடுகள் இருந்த போதிலும் எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் அத்தனை பேர்களும் ஒழுக்கமான ஆசிரியர்களாக இருந்தார்கள்.

அவர்களின் ஒழுக்க விருப்பங்கள், என் மேல் திணித்த நிர்ப்பந்தங்கள் இன்று வரைக்கும் எனக்குப் பலவிதங்களிலும் உதவி கொண்டு இருக்கிறது. இன்று என் வாழ்க்கையை இயல்பான வாழ்க்கையாக வாழ கற்றுக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு முறையும் போராட்டத்தில் இருந்து மீண்டும் மீண்டும் எழுந்து வர உதவியாய் உள்ளது.

ஆசிரியர்களின் முக்கியத் தரமே மொத்த மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக இருப்பது தானே?

இன்றைய காலகட்டத்தில் உங்களுக்குத் தெரிந்த ஆசிரியர்களைப் பட்டியலிட்டுப் பாருங்க.

இதைப் போலவே இப்போது உங்கள் குழந்தைகளின் பள்ளியில், உறவினர்களின் குடும்பத்தில், படிக்கும் பள்ளி ஆசிரியர்களைப் பற்றி நினைத்துப் பாருங்க.

வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்று புரியக்கூடும்,

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book